தென்காசி: குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் நாளை (20ம்தேதி) தெப்ப உற்சவ திருவிழா கொரோனா தடுப்பு விதிகளுக்குட்பட்டு நடக்கிறது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவ திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப உற்சவ திருவிழா நாளை (20ம்தேதி) மாலை 5 மணிக்கு மேல் நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை மாலை குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள், இலஞ்சி முருகன், வள்ளி, தெய்வானை மேளதாளங்கள் முழங்க சித்திர சபைக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது.
சித்திர சபைக்கு எதிரில் உள்ள தெப்பத்தில் சுவாமி, அம்பாள், இலஞ்சி குமரன், வள்ளி, தெய்வானை எழுந்தருளி நீராழி மண்டபத்தை 11 முறை சுற்றி வலம் வரும் வைபவம் நடக்கிறது. இதற்காக தெப்பம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.